2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து, பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 30 ரூபாயாக இருந்தது. இது தினசரி ரயில் பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் சுமையாக அமைந்திருந்தது.
கொரோனா பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிய பிறகும் கூட, இந்த உயர் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பயணிகள் ரயில்களில் 20 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இனி பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
