நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “வடசென்னை” திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் 3 பாகங்களாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களுக்கான அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த “வாத்தி” பட விழாவில் நடிகர் தனுஷிடம் “வடசென்னை 2” படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” என்று கூறினார்.
அதேபோல், வெற்றிமாறன் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் “வடசென்னை 2” பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெற்றிமாறனிடம் “வடசென்னை 2” பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு நான் இயக்கி முடித்துள்ள ‘விடுதலை 2’ படமே எப்போது வரும் என்று தெரியவில்லை. அதனால் ‘வடசென்னை 2’ எப்போது வரும் என்று எனக்கு தெரியாது. அடுத்து ‘வாடிவாசல்’ படம். அதன் பிறகு என்ன என்பது தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும், அந்த ரசிகர் “எந்த ஆண்டு என்றாவது கூற முடியுமா?” என்று கேட்டதற்கு, வெற்றிமாறன் “அது அவ்வளவுதான்.. தெரியாது என்றால் அவ்வளவுதான்” என்று சூசகமாக பதிலளித்தார். இதன் மூலம், “வடசென்னை 2” படம் இனிமேல் வராது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
