தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தாத அஜித், அவரது நினைவிடத்திற்கும் இதுவரை வரவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த பல நடிகர்களும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அஜித் இதுவரை வராதது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில், அஜித் தரப்பில் இருந்து விளக்கமும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து சினிமா பத்திரிக்கையாளர் வி.கே. சுந்தர் கூறுகையில், “விஜயகாந்த் மறைவிற்கு உடனே அஜித் விஜயகாந்தின் மச்சான் சுதீஷிடம் குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும், அதை பிரேமலதாவிடமும் தெரிவிக்க சொன்னதாகவும் கூறினார்.
மேலும், விவேக் மறைவிற்கு அன்று இரவே விவேக் உடலை பார்த்து அஜித் அஞ்சலி செலுத்தியதாகவும், எஸ்.பி.பியின் மறைவிற்கும் மறு நாள் அவர் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறினார்.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதற்கு காரணம் சூட்டிங்தான் என்றும் கூறினார். அஜர்பைஜானில் கடுங்குளிராம். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 14 மணி நேரம் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். அப்படி நடத்தினால்தான் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற காரணத்தினால்தான் எங்கும் நகர முடியாமல் அஜித் இருக்கிறாராம்.
ஒரு வேளை அவர் வந்தால் மூன்று நாள் இடைவெளி வந்து விடும். இது விடாமுயற்சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால்தான் வராமல் இருந்திருக்கிறார் என்று கூறினார்.
மேலும், இரங்கல் செய்தி என்பது அஜித்துக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்குமே உள்ள விஷயம். அதை பப்ளிசிட்டி செய்வதை எப்போதும் அஜித் விரும்பமாட்டார். அதனாலேயே அவர் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் அறிக்கையை வெளியிடவில்லை என்றும் கூறினார்.”
அஜித் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வி.கே. சுந்தரின் விளக்கமும், அஜித்தின் கடந்த கால நடவடிக்கைகளும், அஜித் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள உதவும் என்று கூறலாம்.
