பா. ரஞ்சித்தின் நண்பரும் அறிமுக இயக்குநருமான ஜெயக்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ளது ப்ளூ ஸ்டார் திரைப்படம். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் கிரிக்கெட் விளையாட்டையும் அதை சுற்றி நடக்கும் உள்ளூர் அரசியலையும் மையப்படுத்தி உருவாகி உள்ளது.
பா. ரஞ்சித் இயக்கும் படங்களும், அவர் தயாரிக்கும் படங்களும் ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்களின் எழுச்சி அரசியல் படமாகவே இருக்கும் என்பது தெரிந்த ஒன்று தான். அதே ஃபார்முலா தான் இந்த ப்ளூ ஸ்டார் படத்திலும் தொடர்கிறது.
அரக்கோணத்தில் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணிக்கும் சாந்தனுவின் ஆல்ஃபா மேல் கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே போட்டியும் சண்டைகளும் அரங்கேறி வருகின்றன. அது ஒரு கட்டடத்துக்கு மேல் பொதுப் பிரச்சனையாக மாற எதிரிகளாக இருக்கும் இருவரும் ஒரே கருத்துக்காக ஒன்றிணைந்து போராடும் போது என்ன என்ன பிரச்சனைகள் உருவாகிறது என்பது தான் இந்த ப்ளூ ஸ்டார் படத்தின் கதை.
கிரிக்கெட் மைதானத்துக்குள் விளையாட்டு, அரசியல் என அரம்பமாகும் படம் இளைஞர்களுக்கும் கிரிக்கெட் விரும்பிகளுக்கும் பிடிக்கும்மே தவிர, அனைத்து மக்களையும் கட்டிப்போடும் என்றால் அது சந்தேகம் தான். ஏற்கனவே பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி கனா எனும் அட்டகாசமான படம் வெளியான நிலையில், ப்ளூ ஸ்டார் படம் அதை தாண்டி இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. அடுத்து வரவிருக்கும் லால் சலாம் படத்திலும் இதே கிரிக்கெட் மற்றும் மத அரசியல் படமாக வரப்போவது எப்படி இருக்கும் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.
ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக செல்லும் படம் ஒரு கட்டத்துக்கு மேல் இப்படித்தான் சென்று, இப்படித்தான் முடியும் என்கிற யூகிக்க முடிகிற கதையில் கச்சிதமாக கடைசி வரை கடைசி ஓவர் வரை சென்று முடிகிறது.
இயக்குநர் எடுத்துக் கொண்ட கதையை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரம்மாதம். ஆனால், படத்தில் ஏதோ மிஸ் ஆகிற உணர்வு கடைசி ஓவர் வரை இருப்பதை தவிர்க்க முடியவில்லை.ப்ளூ ஸ்டார் என்பது கிரிக்கெட், அரசியல் மற்றும் கனவுகளின் கலவையாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற கருத்தை படம் வலியுறுத்துகிறது. படத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், கடைசியில் எதிர்பார்த்த முடிவு தான் வருவதால் ஏமாற்றம் ஏற்படுகிறது. இருந்தாலும், படத்தின் படைப்பாளர்களின் முயற்சியை பாராட்டலாம்.
ரேட்டிங்: 3/5
