நடிகர் விஜய் தனது தாயார் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துள்ள விஜய், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
சினிமா, அரசியல் என பிஸியாக இருக்கும் விஜய், சமீபத்தில் தனது தாய்க்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். சென்னை கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் அமைந்துள்ள இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சில தினங்களுக்கு முன்பு, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் இந்தக் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது பேசிய ஷோபா சந்திரசேகர், “ரொம்ப நாளாக ஒரு பாபா கோயிலை எங்கள் இடத்தில் கட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறிக் கொண்டே இருந்தேன். அதற்கேற்ப அவரும் கட்டிக் கொடுத்துவிட்டார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு வந்து தரிசனம் செய்துவருகிறேன்” என்று கூறியுள்ளார்.
விஜய் தனது தாய்க்காக கட்டியுள்ள இந்த சாய்பாபா கோயில் தற்போது பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
