சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முழு படமும் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதாகும் புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டணத்திற்கான வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்பிற்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க பல நடிகர்கள் கோரிக்கை வைத்திருப்பதையும் நினைவு கூர்ந்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் வெளியூர் சென்று உள்ளதாகவும், அவர் வந்த பிறகு புதுச்சேரியில் படப்பிடிப்புக்கான கட்டணம் குறைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இதுகுறித்து சந்தானம் கூறுகையில், படப்பிடிப்பு வரியை குறைக்க வேண்டுமென்றும் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டுமென்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறினார். ஏற்கனவே நடிகர்கள் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் பலர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.