வெயில் அதிகரித்து வரும் நிலையில், தாகத்தை தணிக்க தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பழத்தை செயற்கையாக பழுக்க வைப்பது, சிவப்பாக காட்ட ரசாயனம் சேர்ப்பது போன்ற செயல்களில் சில வியாபாரிகள் ஈடுபடுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில், தர்பூசணியில் வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்திய வியாபாரிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, தர்பூசணியை சிவப்பாக காட்டுவதற்காக சிவப்பு பொடியை சர்க்கரை பாகில் கலந்து பூசும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய ரசாயனம் கலந்த தர்பூசணிகளை உட்கொள்வதால், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், நீண்டகாலத்தில் இது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் வழிவகுக்கலாம்.
தர்பூசணி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தர்பூசணியின் மேல் விரலை தேய்த்து பார்த்தால் கையில் சிவப்பு ஒட்டினால், அது ரசாயனம் கலந்ததன் அறிகுறியாகும்.
சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தர்பூசணி வாங்காமல், இயற்கையான நிறத்தில் இருக்கும் பழங்களை தேர்ந்தெடுக்கவும்.
துண்டு போட்டு விற்கப்படும் பழங்களை விட, ஒரே பழமாக வாங்கி வீட்டில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இத்தகைய மோசடி நடப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ரசாயனம் கலந்த தர்பூசணிகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
