தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024 சென்னை நந்தனம் சிஎம் மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. 19 நாட்கள் என ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று புத்தகக் காட்சி நடைபெறாது என்று பபாசி அறிவித்துள்ளது. கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒருநாள் மட்டும் புத்தகக் காட்சி நடைபெறாது என்று பபாசி தலைவர் ஜி.கே.விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால், புத்தகக் காட்சியை காண காத்திருந்த வாசகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
