நான் அவனில்லை திரைப்பட பாணியில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த வாலண்டர் பென்னட் ரயான் (30) என்பவர் போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை செய்த இடத்தில் அவருடன் பணிபுரிந்த 21 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்து திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். அப்போது தான் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருப்பது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து பெண் வீட்டார் விசாரித்த போது திருமணமானது தனக்கு அல்ல, அவர் தன்னுடைய சகோதரர் என்று கூறியுள்ளார். தனது சகோதரர் குடும்பத்துடன் துபாயில் வசிக்கிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
தான் சொல்வதெல்லாம் உண்மை என்று காட்டுவதற்காகத் தன்னுடைய திருமணப் புகைப்படத்தில் தன்னுடையே மேலும் ஒரு படத்தைத் தயார் செய்தும் பெண் வீட்டாரிடம் காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை என சகலத்தையும் போலிகளாகத் தயார் செய்து காட்டியிருக்கிறார். ஆனாலும் சமதானம் அடையாத பெண் வீட்டார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
அப்போது ரயானுக்கு திருமணமானது தெரியவந்தது. நிச்சயதார்த்தத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு பணம் கொடுத்தனர். அதைக் கேட்ட போது ராயன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து அப்பெண் ஆவடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பென்னட் ரயான், மகனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அவருடைய தாய் செலினா ஆகியோரை தேடி வருகின்றனர்.