தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களையும், கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் புகைப்படங்களையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது தனது விரலில் அணிந்துள்ள மோதிரத்தை காட்டி அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்றும், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நயன்தாராவின் திருமணம் அடுத்த வருடம்(2022 ) நடைபெற இருப்பதாகவும், திருமண தேதியை திருப்பதி கோவிலில் உள்ள புரோகிதர்களை வைத்து முடிவு செய்து விட்டதாகவும் வலைத்தளத்தில் புதிய தகவல் பரவி வருகிறது. திருமணத்துக்கு முன்பு கைவசம் உள்ள படங்களை முடித்து விட நயன்தாரா திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ‘யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் அந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிடபட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நயன்தாரா திருமணம் முடிந்துவிடுமா என்று கூறி வருகின்றனர்.
ஏற்கனவே நயன்தாராவின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்காக தான் நயன்தாரா யாருக்கும் சொல்லாமல் திடீரென்று நிச்சயதார்த்தத்தை முடித்ததாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமண தேதியை அவர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்துவிட்டதாகவும் அதனையே விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போதும்பா.. சீக்கிரம் கல்யாணத்த முடிங்க என ரசிகர்கள் பொறுமை இழக்கும் அளவுக்கு கல்யாண பேச்சுகள் பரவிவிட்டது. இதனால் அடுத்தமாதமாவது திருமணம் உறுதியா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.