மும்பையில் நடைபெற்ற அம்பானி குடும்ப நிறுவனத் தொடக்க விழாவில் கணவர் நிக் ஜோனாஸ், மகள் மால்தி மேரி ஜோன்ஸ் உடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாச்சரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்டமாக நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் நீடா முகேஷ் அம்பானி நடனம் ஆடி விருந்தினர்களை வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இசை, ஆடை அலங்கார கண்காட்சி, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷோகலா மேதா, ரிலையன்ஸ் ரீட்டைல் தலைவர் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல், ரிலையன்ஸ் எனர்ஜி தலைவர் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், டெண்டுல்கர், தீபிகா படுகோன், உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில் பிரியங்கா சோப்ரா பீச் நிற கவுனிலும் நிக் ஜோனாஸ் கருப்பு நிற ஆடையிலும் அசத்தினர். அதோடு மட்டுமில்லாமல் அட்டகாசமான காஸ்ட்யூமில் ஆட்டோவில் ஸ்டைலாக உக்கார்ந்தபடி போஸ் கொடுத்தனர். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்த வண்ணம் உள்ளனர்.