ரோஹித் சர்மாவின் 2027 உலகக் கோப்பை கனவு: “50 ஓவர் உலகக் கோப்பைதான் உண்மையான உலகக் கோப்பை!”
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2027 ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
36 வயதான ரோஹித் சர்மா, 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும், 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதே தனது இலட்சியம் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி தோல்வியே காணாமல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனால், ஐசிசி கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.
இந்த நிலையில், இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
“பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற யூடியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா இதனைத் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“உண்மையில் ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை. ஆனால், வாழ்க்கை உங்களை எங்கு கூட்டிச் செல்லும் என்பது தெரியாது.
நான் நன்றாக விளையாடி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 50 ஓவர் உலகக் கோப்பையே உண்மையான உலகக் கோப்பை. 50 ஓவர் உலகக் கோப்பைகளைப் பார்த்து நாங்கள் வளர்ந்தோம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடைபெறுகிறது. கண்டிப்பாக அதற்கு நாங்கள் தகுதி பெறுவோம்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்பு வரை நாங்கள் நன்றாக விளையாடினோம். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதும் என நினைத்தேன். இறுதிப் போட்டி எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. இறுதிபோட்டிக்கு முன்பு வரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அந்த நாள் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. இறுதிப் போட்டியில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை” என்றார் ரோஹித் சர்மா.
