நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் ஒரு தூண் என ராஸ் டெய்லரை குறிப்பிடலாம். அந்த அளவுக்கு நிதானமாகவும் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் விளையாடக்கூடியவர். இந்த நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த கோடை விடுமுறைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெறுவேன் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், சொந்த மண்ணில் நடக்கும் வங்காள தேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளாக அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி. எனது நாட்டுக்காக விளையாடியதில் எனக்குக் கிடைத்த பெருமை. இனி வரவிருக்கும் போட்டிகளுக்கு தனது முழு கவனம் செலுத்துவதாக டெய்லர் கூறினார்.
Today I’m announcing my retirement from international cricket at the conclusion of the home summer, two more tests against Bangladesh, and six odi’s against Australia & the Netherlands. Thank you for 17 years of incredible support. It’s been an honour to represent my country #234 pic.twitter.com/OTy1rsxkYp
— Ross Taylor (@RossLTaylor) December 29, 2021
டெய்லர் கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக களமிறங்கினார். 233 ஒருநாள் போட்டிகளில் டெய்லர் 8, 581 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள் அடித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் 7,584 டெஸ்ட் ரன்களை எடுத்தார். இதில் அவர் 19 சதங்கள் அடித்தார்.
102 டி20 போட்டிகளில் 1909 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் டெய்லர் வெற்றிக்கான ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.