தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித்தின் அடுத்த படம் “விடாமுயற்சி”. இந்த படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா அஜித் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். அஜித்துடன் தம்பி ராமையா இணைந்து வேதாளம், வீரம், விசுவாசம் போன்ற மூன்று சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் அஜித்துடனான நெருக்கம் அதிகமாகவே இருக்கும் என பல ரசிகர்கள் அஜித்தை கேட்டதாக சொல்லுங்கள் என பார்க்கும் போதெல்லாம் கூறுகிறார்கள் என ஒரு பேட்டியில் தம்பி ராமையா கூறினார்.
மேலும், அஜித்தின் பயணம் என்பது சற்று வித்தியாசமானது என்று தம்பி ராமையா கூறினார். “நிலவில் போய் காலை வைத்த பிறகு தங்க முடியாது. கீழே வந்துவிட வேண்டும். இருந்தாலும் அங்கேயே அவர் இருக்கிறார் என்றால் அவரை தூக்கிக் கொண்டு போனது ராக்கெட். அவராவே போயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் கீழே வந்து விடலாம். ஆனால் கொண்டு போனது ராக்கெட். ஒரு இடத்திற்கு போய் பத்துவருடமாக அதே இடத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால் அதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது. அப்ப அவர் எதையோ இழந்திருக்கிறார். அதுவும் பெரிதாக இழந்திருக்கிறார். மிகவும் தனித்துவம் கொண்ட மனிதர் அஜித். ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை புகழையும் அடைக்காத்துக் கொண்டிருக்கிறார். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்னாலும் வெறிப்பிடித்த ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோ ஒரு தனித்துவம் அவரிடம் இருக்கிறது.
தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்கக் கூடிய நடிகர். உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால் அவர் உயர்ந்தவர்தான். அந்த இடத்திற்கு அவர் சாதாரணமாக போயிருக்க முடியாது. அமராவதியில் இருந்து விடாமுயற்சி வரைக்கும் உள்ள படிக்கட்டுகளை பார்க்கும் போது ஆங்காங்கே பல மேடு பள்ளங்களை முள் செடிகளை கடந்து தான் போயிருக்கிறார். அதற்காக அவர் எடுத்துக் கொண்டது விடாமுயற்சி மட்டும்தான்” என்று தன் உள்ளத்தில் இருந்து அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக பேசினார் தம்பி ராமையா.
தம்பி ராமையாவின் இந்த பேச்சு, அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியை இந்த பேச்சு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
