தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருந்தவர் விஜயகாந்த். அவரது மறைவின் பின்னரும் அவரது புகழ் மறையவில்லை. அவரது நண்பராகவும், சக நடிகருமாக இருந்த தலைவாசல் விஜய், விஜயகாந்த் பற்றிய தனது கருத்துக்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
“திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். இயக்குனர்கள் அரவிந்த்ராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆபாவாணன், ராம்கி, அருண்பாண்டியன் என பலரும் அவர் மூலமாகத் தான் வந்தோம். அவர் காட்டிய வழி தான் இன்று திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரமும் கொடுத்தது” என்று தலைவாசல் விஜய் கூறுகிறார்.
தலைவாசல் விஜய், 1991 ஆம் ஆண்டு “காந்தி பிறந்த மண்” படத்தில் விஜயகாந்துடன் அறிமுகமானார். அதன்பிறகு, “வல்லரசு”, “நரசிம்மா”, “தமிழ்செல்வன்” உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தனர்.
“மற்றவங்களுக்கு சாப்பாடு போட்டு திருப்தி அடையும் நல்ல மனுஷன். மற்றவங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா முன்ன நின்னு செய்வார்” என்று விஜயகாந்தை பற்றி தலைவாசல் விஜய் புகழ்ந்து பேசுகிறார்.
“நரசிம்மா பட சூட்டிங்ல ரகுவரன், நாசர், ஆனந்த்ராஜூம் நடிச்சோம். நாலுபேரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல போகும்போது அவரைப் பத்தித் தான் பேசிக்கிட்டு இருந்தோம். அவரோட தீவிர விசிறி தான் ரகுவரன்” என்று விஜயகாந்தின் மீதான ரகுவரனின் அன்பை தலைவாசல் விஜய் பகிர்ந்து கொள்கிறார்.
“அவரைப் பிடிக்காத ஆள் யாருமே கிடையாது. மூணு பேருமே எனக்கு சீனியர். இதுல என்னன்னா நாங்க நாலு பேருமே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல இருந்து வந்தவங்க தான். விஜயகாந்தை யாராவது பிடிக்கலேன்னு சொன்னாங்கன்னா அவங்க இரக்கமே இல்லாதவங்க. மனசே இல்லாதவங்க” என்று விஜயகாந்தின் மீதான மக்கள் அன்பை தலைவாசல் விஜய் விளக்குகிறார்.
“அவர் ஜாதி, மதம் எதுவுமே பார்க்காம உதவி செய்றவரு தான் கேப்டன். மதுரைக்கு எப்படி மீனாட்சி கோவிலோ அது மாதிரி விஜயகாந்த். அவர் பண்ண தர்மங்களுக்கு அவரு உடல் ரீதியா இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கக்கூடாது. அது மட்டும் தான் கொஞ்சம்… நெருடல்… அப்ப கர்மாங்கறது எங்கே போச்சுன்னு தெரில” என்று விஜயகாந்தின் மரணத்தைப் பற்றி தலைவாசல் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தலைவாசல் விஜய்யின் இந்த கருத்துக்கள், விஜயகாந்த் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.
